செம்மொழி மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்துகொண்டவர்களில் உங்கள் குரல் இதழாசிரியரும் பாவலருமாகிய கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
"தமிழ்ச் சொற்புணர்ச்சிக் கோட்பாடுகளும் புதிய விதிகளும்" எனும் தலைப்பில் கவிஞர் ஐயா மாநாட்டில் தம்முடைய கட்டுரையைப் படைத்தார். அதன் நிகழ்படம் (Video) கீழே தரப்பட்டுள்ளது. கண்டு மகிழ்க!
பகுதி 1:- (3.38ஆவது நிமயத்தில் கவிஞரின் உரை தொடங்குகிறது)
பகுதி 3:-
பகுதி 4:-
செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, 06.07.2010 அன்று மாலை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. செம்மொழி மாநாட்டுச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கவிஞர் சீனி நைனா முகமது, பிரான்சு பெஞ்சமின் லெபோ, சிங்கப்பூர் அமலதாசன், மலேசியா ஐ.இளவழகு ஆகியோர் உரையாற்றினார்கள். மறைமலை இலக்குவனார் தலைமை தாங்கினார்.
கவிஞர் சீனி ஐயா, தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். அவன் வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came என்பர்; மலாயில் வேறு மாதிரி கூறுவர். இதில் அவன் என்பதை எடுத்துவிட்டால், வந்தான் எனத் தமிழில் எஞ்சும்; ஆங்கிலத்தில் came என்பது எஞ்சும். தமிழில் உள்ள சொல்லில் உயர்திணை, இறந்த காலம், ஆண்பால், திணை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆங்கிலத்தில் இறந்த காலம் என்ற ஒன்று மட்டுமே வெளிப்படுகிறது.
தமிழில் வெட்டு என்பது வினைச் சொல்; அந்தச் செயலைச் செய்யும் கருவிக்கு வெட்டி (மண் வெட்டி) என்று பெயர்; இது போல் ஆங்கிலத்தில் cut என்ற வினையைச் செய்யும் கருவிக்கு cutter என்று பெயர்; அதே நேரம் heat என்ற என்ற வினையை ஆற்றும் கருவிக்கு heater என்று பெயர். Cut உடன் er சேரும்போது, T இரட்டிக்கிறது; ஆனால், heat உடன் er சேரும்போது இரட்டிக்கவில்லை. இது ஏன் எனப் பலரையும் கேட்டேன். விளக்கம் கிட்டவில்லை. ஆங்கிலத்தில் இதற்கான இலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை. ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு விளக்கம் இருக்கிறது.
முதற்சொல் குறிலாக இருக்கையில், வரும் சொல் உயிரானால், முதற்சொல்லின் ஈற்றெழுத்து இரட்டிக்கிறது. ஆனால் நெடிலாக இருந்தால் இரட்டிப்பதில்லை. கல் என்ற சொல்லுடன் அடி என்ற சொல் இணைந்தால், கல்லடி என்ற சொல்லில் 'ல்' என்ற எழுத்து இரட்டிக்கிறது. ஆனால், கால் என்பதுடன் அடி இணைந்தால், காலடி என ஆகிறது. இங்கு இரட்டிப்பதில்லை. இதற்கான இலக்கணத்தைத் தெளிவாக வரையறுத்துள்ளது, தமிழின் செம்மையைக் காட்டுகிறது என எடுத்துரைத்தார்.
செம்மொழி மாநாடு வெற்றிகரமாக நடந்தாலும் இங்கே அறிவுபூர்வமாகத் தமிழை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்‘ என ஒருவர் பாடினால், அதை என்ன செலவானாலும் திருத்திவிட்டுத்தான் மறுவேலை என்ற துடிப்பு எவரிடமும் எழவில்லையே. அப்புறம் என்ன செம்மொழி? எனக் கண்டித்தார். ‘அசத்தப் போவது யாரு?’ என்ற தலைப்பினை விமர்சித்த அவர், அசத்தப் போவது நாயா, பன்னியா? மனிதன் தானே? அசத்தப் போகிறவர் யார்? என எழுத வேண்டியது தானே எனக் கேட்டார்.
தமிழகப் பத்திரிகைகளையும் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து, மலேசிய ஊடகங்களும் இப்போது கெட்டுவிட்டன. தமிழகத்திலிருந்து வரும் இவற்றை மலேசியாவில் தடை செய்தால் நன்றாய் இருக்கும் எனக் கூறினார்.
- நன்றி:- ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செய்தி [வல்லமை மின்னிதழ்]
